ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்குச் சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆக.21 ஆம் தேதியன்று இரவு, சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்று உச்ச நீதிமன்றம் அக்.,22 அன்று ஜாமின் வழங்கியது. ஆனால் சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன், இதே விவகாரத்தில் அக்.16 அன்று அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நவ.27 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அதேநேரம், ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி இதுவரை பலமுறை சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் சிதம்பரம், திகாரில் வசித்த நாட்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டி உள்ளது.
இதனிடையே இன்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, பொருளாதார குற்றங்கள் மிகவும் அபாயகரமானது. அது தேச நலனை பாதிக்கும் என்று பதிலளித்துள்ளது.
ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையில் மத்திய அரசு தரப்பு வாதம் முன்வைத்த போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும் போது, சாதாரண மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்று தெரிவித்தது.