ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
2020-21-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 31-லும், பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்த இரு முக்கிய நாட்களில் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பலமாகத் தெரிவிக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
12.25% ஊதிய உயர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்தே தற்போது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி 8 அன்று நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்ததில் வங்கி ஊழியர்கள் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில்தான், அடுத்தகட்டப் போராட்டத்தை வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் போராட்டத்தை நடத்தவுள்ளது. வங்கி ஊழியர்கள் பட்ஜெட் நாளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்த வேலை நிறுத்ததிலும் தங்களுக்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் மீண்டும் மார்ச் மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.