மத்திய அரசின் சார்பில் இந்த ஆண்டு 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜெட்லி மற்றும் சுஸ்மா சுவராஜுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், இலக்கியம் மற்றும் கல்வி துறையில் புதுச்சேரியை சேர்ந்த மனோஜ் தாஸ், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வர்த்தக மற்றும் தொழில் துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் கரண் ஜோஹர், விளையாட்டு வீரர் ஜாஹிர் கான், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ சபி மகபூப், ஷேக் மகபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கிய பிரதீப் தலப்பிலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த விகே முனுசாமி கிருஷ்ண பக்தருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பத்ம விருது பெறுவோரில் 34 பேர் பெண்களாவர். வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இறப்புக்குப் பிறகான விருது 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.