கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள்களும் விடுக்கப் பட்டுள்ளது.
தற்போது கொரோனா அச்சம் என்ற ஜுரம் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதத்தில், மக்களை தங்கள் இல்லங்களில் வைத்திருக்க முடிவு செய்த அரசு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவித்தது. மார்ச் 31 வரை பல்வேறு அலுவலகங்க்ளும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தி உள்ளன.
திரையரங்குகள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத் தலங்களை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு விடுமுறை என்னும் சூழலில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. தாஜ்மகாலுக்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.