கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாடெங்கிலும் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க ரயில்வே வாரியம்,தனிநபர் பாதுகாப்பு கவச உடைகளை (பிபிஇ) தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் 1,000 தனிநபர் பாதுகாப்பு கவசஉடைகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம் (டிஆர்டிஓ) ரயில்வே பெற்றுள்ளது.
ரயில்வேக்குச் சொந்தமான 17 பணிமனைகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் உற்பத்தியாகும் 1,000 பாதுகாப்பு கவச உடைகளில் 50 சதவீதத்தை நாட்டிலுள்ள மற்ற டாக்டர்களுக்கும் வழங்க ரயில்வே பரிசீலித்து வருகிறது.
இதற்கான கச்சா பொருட்கள் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜகதாரி பகுதியில் பெறப்பட்டு அங்கிருந்து ரயில்வே பணிமனைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. வரும்நாட்களில் இந்தப் பணிமனைகளில் கவச உடை உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.5 கோடி தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் வரும் ஜூன் மாதத்துக்குள் இந்தியாவில் தேவைப்படும் என கணக்கிடப்பட் டுள்ளது.