புது தில்லி:
இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கனரக கிரையோஜெனிக் இஞ்சினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி -மார்க் 3 ஜிசாட்-19 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஜிசாட்-19ஐ விண்ணில் நிலைநிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Congratulations to the dedicated scientists of ISRO for the successful launch of GSLV – MKIII D1/GSAT-19 mission.
— Narendra Modi (@narendramodi) June 5, 2017