தெலுங்கானா மாநிலத்தில் நாய்க்கடிக்கு ஆளான 6 வயது பெண் குழந்தை, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடுப்பால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹோலி என்பவரின் 6 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது 5 வெறிநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அருகில் இருந்தவர்கள் கடுமையாகப் போராடி அந்த நாய்களை விரட்டியுள்ளனர். இதனையடுத்து நாய்க்கடியால் அதிக ரத்தப்போக்குடன் இருந்த குழந்தையை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இது போல் 2 மருத்துவமனைகளில் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட பின்னர் அந்தக் குழந்தை நல்லகுந்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நிலோபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாகவா அல்லது கடுமையான காயங்களைக் கண்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து விட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் உயிருக்குப் போராடிய குழந்தையை மருத்துவமனைகள் அலட்சியமாக கையாண்டதாக குழந்தையின் தந்தை ஹோலி கண்ணீருடன் தெரிவித்தார்.போடுப்பல் நகரில் வெறிநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் என்று போடுப்பல் மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். எது எப்படியோ நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வெறிநாய்களால் கடித்துக் குதறப்பட்ட 6 வயது பெண் குழந்தை, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் 5 மணி நேரமாக உயிருக்குப் போராடி இறந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.