கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டது. பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளனர்.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினமும் ஏதாவது போஸ்ட்களை சமூக வலைத்தளங்களில் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிரபலங்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிட குறிப்பிட்ட தொகை வசூலிப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரராக திகழும் விராட்கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பதன் தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் முதல் 10 இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 12-ம் தேதி முதல் மே-14 வரை லாக்டவுன் நேரத்தில் விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதித்து உள்ளார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. கோலி 3 ஸ்பான்சர்கள் பதிவின் மூலமாக 3 கோடியே 60 லட்சம் சம்பாதித்துள்ளார். கோலியை இன்ஸ்டாகிராமில் சுமார் 6 கோடியே 21 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.
முதலிடத்தில் போர்சுகல் கால்பந்து அணயின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் மூலம் 18 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார். இரண்டாவதாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி ரூ.12.5 கோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.