அயோத்தியில் ராமர் ஆலயம் தடைபடாமல் பணிகள் நடைபெற வேண்டி, மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெருஞ்சுணை சிவன் ஆலயத்தில், புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி இந்து முன்னணியினர் வழிபாடு செய்தனர்.
முன்னதாக அயோத்தி ராம ஜென்ம பூமியில் முறைப்படி ராமர் கோயில் கட்டும் பணி புதன்கிழமை 10.6.2020 இன்று காலை 8 மணி பூஜைக்குப் பின் தொடங்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணி முறைப்படி முதல் செங்கல் எடுத்து வைக்கப்பட்டு தொடங்கப் பட்டது. குபேர திலக கோயிலில் உள்ள சிவனுக்கு பூஜை நடத்தப்பட்டு ருத்ரா அபிஷேகம் நிகழ்ச்சி முடிந்தபின் இந்தப் பணி தொடங்கப்பட்டது. இந்த ருத்ரா அபிஷேக நிகழ்ச்சியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் நபர்கள் பங்கேற்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் மீண்டும் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமர் ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை பணி இன்று காலை 8 மணிக்கு பூஜையுடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்யிா கோபால் தாஸின் செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டுமானப் பணி ருத்ரா அபிஷேகத்துடன் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. கடவுள் ராமர் வழிபட்ட சிவனுக்கு முதல் பூஜை நடத்தப்படுகிறது. அந்த பூஜைகள் அனைத்தும் பழமையான குபேர திலக கோயிலில் இருக்கும் சிவன் ஆலயத்தில் நடக்கும்.
10ஆம் தேதி காலை 8 மணிக்கு பூஜை தொடங்கும். பூஜையை மகந்த் கமல் நாயன் தாஸ் உள்ளிட்ட மற்ற சாதுக்கள் ஆகியோர் செய்கின்றனர். இந்தப் பூஜை 2 மணிநேரம் நடக்கும். இந்த நிகழ்ச்சிக்கு மிகச் சிலரே அழைக்கப்பட்டுள்ளனர்
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் 77 நாட்களுக்குப் பின் பக்தர்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்’ என தெரிவித்திருந்தார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை