கர்நாடகா மாநிலத்தில், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற, இ-பாஸ் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் உள்ள, ஓசூர் பகுதியில் ஊரடங்கு காரணமாக, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கால், சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது.
தமிழக எல்லையான ஜூஜூவாடியில், பிற மாநிலத்தில் இருந்து, இ-பாஸ் அனுமதியுடன் வந்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த, 14 இரவு, 8:00 முதல், 22 காலை, 5:00 மணி வரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும், கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுவதாக, அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
அதனால் கடந்த, 22 முதல் அம்மாநிலத்தில் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓட துவங்கின. தமிழகத்தில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு செல்ல, இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட அனைத்து சோதனைச்சாவடிகளிலும், தமிழகத்தில் இருந்து, இ-பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டன.
நடந்து சென்றவர்களை கூட அனுமதிக்கவில்லை. மருத்துவ, இ-பாஸ் பெற்றவர்கள், சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.