கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணமகன், மணமகள் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செங்கலாவில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மணமகன் மற்றும் மணமகளுக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் தோன்றினால் அருகிலுள்ள சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த மணமகளின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் மீது கேரள தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.