அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் மருத்துவமனை ஊழியர்கள் காட்சிய அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது சடலத்தை அப்புறப்படுத்துவதில் ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.
13 மணி நேரத்திற்கு மேல் அந்த பெண்ணின் சடலம் அப்புறப்படுத்தப்படாமல் வார்டிலேயே வைக்கப்பட்டிருந்ததால் மற்ற நோயாளிகள் அச்சமடைந்தனர்.
இதனை வீடியோவில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கே வந்த மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்பிறகே பெண்ணின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.