புது தில்லி:
முத்தலாக் முறையில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் நடைமுறைக்கு எதிராகவும், 2 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு கூறினர். 3 பேர் கூறிய மெஜாரிடி தீர்ப்பாக முத்தலாக் நடைமுறைக்கு 6 மாத கால தடை விதிக்கப்படுகிறது,
முத்தலாக் சொல்லி, தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித் தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது.
அப்போது, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது பற்றி நாங்கள் விசாரிக்கப் போவதில்லை என்றும், ‘முத்தலாக்’ வழக்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா என்பது பற்றி மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர். கடந்த மே 18ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.அதில், இஸ்லாமியருக்கு பிரச்னை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இன்னும் ஆறு மாத காலத்துக்குள் சட்டம் இயற்றும் வரை, முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு மட்டும் தடை விதிக்கப் படுவதாகவும், சட்டம் ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரவில்லை என்றால், முத்தலாக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும் என்றும் கூறியது.
முத்தலாக் முறையில் தலையிடப் போவதில்லை என்றும் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறிய நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம், இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை இந்த சட்டம் இயற்றும் போது மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியது.