கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் சீன ராணுவம் கூடாரங்களை அமைத்து படைகளைக் குவித்தது. பதிலுக்கு இந்திய ராணுவம் கூடுதல் வீரா்களை அங்கு குவித்தது.
குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரா்களுக்கும் இடையே கடந்த மே மாதம்மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது.
குறிப்பாக, இரு நாட்டு ராணுவ துணைத் தளபதிகள் நிலையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எல்லையில் இருந்து படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வதென பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, கல்வான் பள்ளத்காக்கில் இந்திய, சீன படைகளுக்கு இடையே ஜூன் 15ஆம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 பேர் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து, லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீவுடன் கடந்த ஜூலை 5-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அந்த உரையாடலின்போது, லடாக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் பேரில் ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
சீன எல்லைக்கு உள்பட்ட மோல்டோ என்னுமிடத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான குழுவினரும், சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி லியூ லின் தலைமையிலான குழுவினா் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில், கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே அடிக்கடி மோதல் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பது குறித்து இறுதிசெய்ய பேச்சு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.