கர்நாடகா மாநிலத்தில், நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தில் இருந்து, இ- பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள், எந்த தடையுமின்றி அனுமதிக்கப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்க, கடந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில், எவ்வித தளர்வுமின்றி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அன்று ஒரு நாள் மட்டும், தமிழகத்தில் இருந்து, இ -பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.
மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் மீது, போலீசார் தடியடி கூட நடத்தினர்.
இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தைபோல், கர்நாடகாவில், இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. அதனால், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், நேற்று அதிகாரிகள் கெடுபிடி காட்டவில்லை.
அம்மாநிலத்தின், இ- பாஸ் இருக்கும் அனைத்து வாகனங்களையும், உரிய விபரங்களை பெற்ற பின், கர்நாடகா மாநிலத்துக்குள் அனுமதித்தனர். அதேபோல், கர்நாடகாவில் இருந்து, இ- பாஸ் அனுமதியுடன் வரும் வாகனங்களை, தமிழக எல்லையான ஜூஜூவாடியில் சோதனை செய்து, தமிழக அதிகாரிகள் அனுமதித்தனர்.