முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, ‛எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. எனவே, கடந்த ஒரு வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து பிரணாப் முகர்ஜி உடனே குணமடைந்து மீள வேண்டும் என்று பலரும் டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து தங்கள் பிரார்த்தனையையும் வெளிப்படுத்தியிருந்தனர்
இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.
இதனிடையே, இன்று மதியமும் அவர் தொடர்ந்து செயற்கை சுவாச முறையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.