நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். கொரோனாவுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விரைவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்படும். மூன்று தடுப்பு மருந்துகளும் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. இந்த மருந்துகள் அறிமுகமான பிறகு ஒவ்வோர் இந்தியருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
நம் விவசாயத்தை நாம் மேம்படுத்த வேண்டும். சர்வதேச சந்தை வரை நம்முடைய விவசாய தயாரிப்புகளை கொண்டு செல்ல வேண்டும். இன்று விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை அவர்களே விற்பனை செய்ய முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதை மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.
உலகில் முக்கியமான 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. எல்லையில் நம் நாடு மிகப் பெரிய சவால்களை சந்தித்துவருகிறது. அண்டை நாடுகளின் ஊடுருவல்களை நாம் வெற்றிகரமான முறியடித்து வருகிறோம். விரைவில் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.