- கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
மஹாராஷ்டிர மாநிலத்தில் சிராவண ( ஆவணி) மாத அமாவாசையன்று காளை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பைல் போளா ( Bail Pola) கொண்டாடப்படுகிறது.,
அதற்கு மறுநாள் ‘ தான்ஹா போளா’ , விதர்பாவில் விமர்சயாக கொண்டாடப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் காளை மாடுகளுக்கு அருமையாய் அலங்காரங்கள் செய்வர். சிலர் காளையின் உடம்புப் பகுதியில் சூழ்நிலைக்கேற்றவாறு
பலவித வாசகங்களை எழுதுவது அனைவரையும் கவருவதாய் இருக்கும். மாலையில் காளை மாடுகளை ஒரு பொது இடத்தில் அழைத்து வந்து மிகப்பெரும் பூஜை செய்கின்றனர்.
சிறந்த காளை ஜோடிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. பின்னர், விவசாயிகள் தங்கள் காளை மாட்டினை வீடுகளுக்கு அழைத்து வருவர். பெண்களும் இல்லங்களில் வண்ண வண்ண ‘ரங்கோலிகள்’ இடுவர்.
பிரசாதமாக மஹாராஷ்டிராவின் உணவான பூரண் போளியை காளை மாடுகளுக்கு வழங்கிய பின்னரே பலப் பெண்கள் உணவருந்துவர்.
விவசாயிகளுக்கு இனாமும் தருவர். இந்த 140 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்படும் இத்திருநாள் இந்த ஆண்டு கொரானாவினால் சற்றே களையிழந்துள்ளதாலும், விவசாயிகள், தங்கள் விவசாயம் உயரும் என்ற நம்பிக்கையுடனுனேயே இன்று பைல் போளா மாநிலம் முழுவதும் தத்தம் வீடுகளில் கொண்டாடுகிறார்கள்.
விதர்பா பகுதியில் பைல் போளாவிற்கு மறுநாள் ‘ தான்ஹா போளா’ கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் மரத்திலாலான நந்தி பொம்மைகளை வழிபடுகின்றனர்.
வர்தா மாவட்டத்தில் சிந்தி( ரெயில்வே) என்னும் ஊரை போளா நகரம் என்றழைக்கின்றனர். இந்த வருடம், 140 – வது ‘தான்ஹா போளா’ வை சிந்தி(ரெயில்வே) கொண்டாடுகிறது . நரேந்திர சுர்கார், மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிடுகையில் “இதிகாசத்தின் படி, சிவபெருமான்- பார்வதி தேவிக்கு இடையில் ஒருமுறை சண்டை வந்தபோது, நந்தியானவர், சிவனுக்கு சாதகமாக பேசியதால் பார்வதி தேவி கோபமடைந்து, நந்தி பகவானுக்கு, ” உன் வாழ்நாள் முழுவதும் நீ கஷ்டத்தையே சுமக்க வேண்டும்,” – என சாபமிட்டார்.
திடுக்கிட்ட நந்தி பகவான் பார்வதி தேவியை சரணடைந்து தன்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். மனமிரங்கிய பார்வதி தேவி, நந்தியாரிடம் ” உன் அருமைகளை குழந்தைகள் அறியுமாறு சிராவண (ஆவணி) மாதத்தின் இறுதி நாளன்று சிறுவர்கள் உனக்கு பொம்மை வடிவில் பூஜை செய்து, உன்னை ஊர்வலமாய் அழைத்து வந்து, உனக்கு இனிப்பு பண்டங்களை வழங்குவர்’ என்ற அவரும் தந்தார்.
வரலாற்று ஆசிரியர்களோ போஸ்லே ராஜே வம்சத்தினர் வாழ்ந்த காலத்திலிருந்து ‘தான்ஹா போளா’ கொண்டாடப் படுவதாக கூறுகிறார்கள். அதன்படியே, விதர்பாவில் “தான்ஹா போளா’ கொண்டாடப் படுகிறது.
ஒவ்வொரு வருடமும் நந்தி செய்யும் கலைஞர்கள் ஒரு மாத காலமாக மரத்திலான வேலைப்பாடுகள் நிறைந்த நந்தியை தயார் செய்ய துவங்குவர். பல பகுதிகளிலிருந்து மக்கள் சிந்தி ( ரெயில்வே) யின் நந்தி பொம்மையை வாங்கி செல்வர்.
சுமார் 70,000 மக்கள் போளா நகரத்தில் ‘தான்ஹா போளா’ வில் கூடுவர். நந்திகளின் ஊர்வலம், முக்கிய நிகழ்வுகள், தற்போதைய பிரச்சனை கள், சாதனைகள் முதலியவற்றை காட்சிகளாக விவரிக்கும் அலங்கார வண்டிகள் கண்ணுக்கு விருந்து,” என்றார்
அவர்.
சிறந்த நந்தி பொம்மைகளுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.
சுர்கார் மேலும் கூறுகையில் ” மத்திய மற்றும் மஹாராஷ்டிர அரசுகள் இந்த கலையர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு
நிரந்தர வருமானம் வர செய்ய வேண்டும்,” என்றார்.
இந்த வருடம் கொரானாவினால் ‘தான்ஹா போளா’ கொண்டாட்டம் களை இழந்தாலும், குழந்தைகளின் உற்சாகம் குறையாமல் தங்கள் வீடுகளில் நந்தி பொம்மைகளுக்கு பூஜை செய்து , தத்தம் பகுதிகளிலேயே உலா வரச் செய்கின்றனர்.