121-ம் ஆண்டு கொண்டாடுகிறது…
திலகர் நிறுவிய கணேஷ் மண்டல்!
கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
லோகமான்ய பாலகங்காதர திலகர் மராட்டிய மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக கணேஷ் உத்ஸவத்தை தொடங்கினார். மக்களை ஒன்றிணைக்கவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை தயார் படுத்தவும், திலகர், கணேஷ் உத்ஸவத்தை ஒரு கருவியாக பயன் படுத்தினார்.
சஞ்சய் தோங்கடே என்ற பத்திரிக்கையாளர் இது குற்த்துக் கூறுகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில், திலகர், தற்போதைய வர்தா மாநிலத்தில் சேலு என்னும் இடத்தை 1899-ம் வருடம் வந்தடைந்தார்.
அவர் ஒரு சபையினை கூட்டினார். அப்போது அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு நபர்கள் கலந்து கொண்டனர். அதனால் திலகர், பாராபாயீ (Barabhai) கணேஷ் மண்டல் என அறிவித்து பக்தியுடன் கூடிய தேச உணர்வை அவர்களிடையே ஊட்டினார்.
அவரின் வழிகாட்டலின் படி காலம்காலமாக பாராபாயீ கணேஷ் மண்டல் சேலு மக்களுக்கு மட்டுமில்லாமல், வர்தா மாவட்ட மக்களுக்கும் ஆன்மீகத்தையும், தேச ஒற்றுமையையும் ஒரு சேர வழிகாட்டுகிறது.
மூன்றாம் தலைமுறையினரும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆண்டு 121 – வது வருடமாக பத்து நாட்கள் கணேஷ் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த வருடம் கொரானாவில் பல நிகழ்ச்சிகளையும், மகா பிராசதம் வழங்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளனர்.
சேலு நகரத்தில் உள்ள குழந்தைகள்கூட பால கங்காதர திலகர் தங்கள் ஊருக்கு வந்ததையும், அதன் பிறகு விடுதலைப் போரில் அவர்கள் தம் முன்னோர்களின் பங்களிப்பையும் களிப்புடன் கூறுகின்றனர்.