எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் மோசடியைத் தடுக்கும் வகையில் ஓடிபி முறை தற்காலிகமாக நடைமுறைப் படுத்தப் பட்டிருந்தது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP எனும் ஒரு முறை பாஸ்வேர்டு வரும். இந்த பாஸ்வேர்டை எண்டர் செய்தால் தான் பணம் எடுக்க முடியும்.
ஏடிஎம் அட்டைகளில் மோசடி செய்து பணம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை தற்போது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்கள் அனைத்திலும் இந்த நடைமுறை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், தற்போது இரவில் மட்டும் இருந்த இந்த பாதுகாப்பு வழிமுறை, வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 24 மணி நேரமும் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும், இதனால் மோசடியாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது தவிர்க்கப் படும் என்றும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஓடிபி முறை நாட்டின் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களிலும் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் ஓடிபி வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்ளகள் இனி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க செல்லும் போது, தங்களது செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வங்கியோடு செல்போன் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வசதியாக, வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது சரியான செல்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்