மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி (रेल राज्य मंत्री सुरेश अंगड़ी जी) கொரோனா பாதிப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
65 வயதாகும் மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கர்நாடகாவின் பெல்காவி தொகுதியிலிருந்து தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா பெல்காம் மாவட்டம் கேகே கொப்பாவில் சோமவ்வா, சின பசவப்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சுரேஷ் அங்கடி அரசியலில் படிப்படியாக முன்னேறினார். தற்போது பெலகாவி லோக்சபா தொகுதிக்கு பிரதிநிதியாக விளங்கும் சுரேஷ் 2004ல் இருந்து நான்கு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரேஷ் அங்கடியின் மறைவு குறித்து அரசியல், திரைத்துறை, வணிகத்துறை பிரமுகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் கட்சியை வலிமையடைய செய்வதற்கு உழைத்த சிறந்த செயல் தொண்டராக அர்ப்பணிப்பு உள்ளத்தோடு எம்பியாக சிறப்பான சாமர்த்தியம் கொண்ட அமைச்சராக சுரேஷ் அங்கடி பணி புரிந்தார் என்று அவருடைய சேவைகளை பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.
சுரேஷ் அங்கடியின் மறைவு தன்னை தீவிரமாக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, சுரேஷ் அங்கடியின் குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.