நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு மணிக்கு தான் நாட்டு மக்களுக்கு ஒரு தகவல் கூறப் போவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிட்டிருந்தார்
கொரோனா காலத்தில் இதுவரை 6 முறை உரையாற்றி உள்ளார் பிரதமர் மோடி. இன்று அவர் ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது…
கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வழக்கம் போல் வெளியே வரத் தொடங்கி உள்ளனர். நாட்டின் நிலைமை ஸ்திரத் தன்மையோடு நிலையானதாக உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் படிப்படியாக சீரடைந்து வருகிறது.
நம் நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது என்றாலும், கொரோனா ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை! அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. எனவே மக்கள் மிக்வும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மக்களைக் காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்றாலும், மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்!
மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களின் குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும்!
தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக பல நாடுகள் போராடத் தொடங்கி உள்ளன.
உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே அரசின் அடுத்த இலக்கு. இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்கத் தேவையான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. தடுப்பூசிகள் இறுதிக் கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு அவை மக்களுக்கு கொண்டுசேர்க்கப் படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.
பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்… – என்று கூறினார் பிரதமர் மோடி.