மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான அவர், ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்தவர். கடந்த 1986–ம் ஆண்டு வெளியான ‘நியூ டெல்லி டைம்ஸ்’ என்ற படத்தில், தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய காரணத்தால், அவருக்கு அப்போது தேசிய விருது வழங்கப்பட்டது. 1993–ம் ஆண்டு வெளியான ‘முகாபிஸ்’ படத்துக்காக ‘சிறப்பு ஜூரி விருது’ மற்றும் 1979–ம் ஆண்டு வெளியான ‘ஜனூன்’ படத்துக்காக ‘தேசிய திரைப்பட விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். நடிகர் சசி கபூர் இந்திய சினிமா உலகுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ அறிவிக்கப்பட்டு உள்ளது. சசி கபூரின் தந்தை பிரிதிவிராஜ் கபூர், இந்தி திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த நடிகர் ராஜ் கபூர் (சசி கபூரின் சகோதரர்) ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, நடிகர் சசி கபூருக்கும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த விருதைப் பெற்றவர்கள் என்ற சாதனை படைக்கவுள்ளனர்.
சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து
Popular Categories