திருச்சூர்: இந்தியாவின் மிக வயதான பெண்மணி குஞ்சன்னம் குட்டி மரணம் அடைந்தார். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்த அவருக்கு தற்போது வயது 112. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சூண்டல் அருகே உள்ள பரனூரைச் சேர்ந்தவர் குஞ்சன்னம். சிறுவயது முதலே வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருந்து வந்த குஞ்சன்னம், திருமணம் செய்து கொள்ளவில்லை. காலணி அணிவதில்லை, பேருந்தில் பயணிப்பதில்லை, ரயில், விமானத்தைப் பார்த்ததில்லை, இப்படி தனது சொந்த கிராமத்திலேயே எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் குஞ்சன்னம். இவர் குறித்து, குடும்பத்தார் லிம்கா சாதனைப் புத்தகத்துக்கு தகவல் அளித்தனர். குஞ்சன்னத்தின் வயதுக்கு சாட்சியாக 1903ம் ஆண்டு பரனூர் எரானெல்லூர் தேவாலயத்தில் வழங்கப்பட்ட ஞானஸ்நான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வயதான பெண்மணியாக குஞ்சன்னம் அறிவிக்கப் பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்த குஞ்சன்னம், திங்கள் முதல் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திங்கள் மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைத் தேற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு, புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தியாவின் அதிக வயதான பெண்மணி குஞ்சன்னம் மரணம்
Popular Categories