டெபிட்கார்டு, கிரெடிட் கார்டுகளை பயனாளர்கள் எப்போதும் கையில் வைத்துக் கொள்ளும் விதமாக ரிசர்வ் வங்கி புதிய விதி ஒன்றை வகுத்துள்ளது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளில் 16 இலக்க எண்கள் இருக்கும். அதை நினைவில் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
அதனால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது நிறுவனங்கள், கார்டு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டும், நாமும் ஆம் என்று கொடுத்து விடுவோம்.
அப்படி என்றால் அடுத்த முறை பணப்பரிவர்த்தனை செய்யும் போது 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கார்டு வேலிடிட்டி, சிவிவி நம்பர் கொடுத்தால் போதுமானது. ஓடிடி வரும் பரிவர்த்தனையை முடித்துவிடலாம்.
ஆனால் இந்த முறையை தடுக்கும் விதமாக ஆர்பிஐ புது விதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, நீங்கள் ஒவ்வொரு முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும், 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டும்.
நேரடியாக கார்டு வேலிடிட்டி, சிவிவி எண் மூலம் பணம் செலுத்த முடியாது. அதாவது உங்கள் கார்டு விவரங்கள் நிறுவனங்களால் சேமிக்க முடியாது.
இந்த விதி அமேசான், ஃபிளிப்கார்ட், கூகுள்பே, பேடிஎம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் கார்டு மோசடியை தடுக்க முடியும் என்கிறது ஆர்பிஐ.
ஆனால் இதனால் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை நேரம் விரயமாகும் என்று அமேசான், ஃபிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாப்ட், சொமோட்டோ உள்ளிட்ட 25 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்த புதிய விதி வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் அனுபவத்தை பாதிக்கும் என தெரிவிக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவன அமைப்பான நாஸ்காம் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடந்த ஜனவரி மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.