விசாரணை என்ற பெயரில் மிரட்டி பெண்கள் ஹாஸ்டலுக்குள் புகுந்த போலீசார் சிலர் அங்கு தங்கியிருந்த பெண்களை மிரட்டி ஆடைகளை களைய வைத்து நடனமாட வைத்த வீடியோ வைரலானதை அடுத்து மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள கனேஷ் நகர் பகுதியில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளுக்கு இந்த விடுதியில் தங்கும் வசதியும் , இலவச உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விடுதியில் அத்துமீறி நுழையும் போலீசார் மற்றும் விடுதி ஊழியர்கள் சிலர் அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அத்துமீறி நடந்து கொண்டதுடன் அவர்களில் சிலரை மிரட்டி ஆடைகளை களைய செய்து நடனமாடச் செய்துள்ளனர்.
இதனை வீடியோவாகவும் அவர்கள் எடுத்துள்ளனர், இந்த வீடியோ காட்சிகள் நேற்று சில ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவர் இந்த பிரச்னையை எழுப்பியதுடன் மாநில அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் இக்குழு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழு வீடியோ பதிவு மற்றும் பிற ஆவணங்கள் கோரப்பட்டு அறிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.