இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியுடனான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். அவருடன் இந்த முறை வித்தியாசமாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார் இதில் இரண்டு சிக்ஸர்களும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.
ரோகித் சர்மாவுக்கு பிறகு களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியா 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆர்வம் காட்டியது. எனினும் முதல் விக்கெட்டுக்கு ஜாசன் ராய் டக் அவுட் ஆனார்.
இந்நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மாலனும் அதிரடியாக ஆடினர். ஜோஸ் பட்லர் 52 ரன்களும் மாலன் 68 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.