மங்களூரு அருகே கோவிலில் திருடிய பணத்தை மனம் திருந்தி உண்டியலில் போட வரும் போது மாட்டிக்கொண்ட திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே எம்மகரே பகுதியில் பப்புசாமி கோவிலில் சில தினங்களுக்கு முன்பு கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது.
இது குறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவிலுக்கு வந்த இரண்டு முஸ்லீம் நபர்கள் தாங்கள் தவறு செய்து விட்டதாகவும், மன்னிக்கும் படியும் கோவில் உண்டியலில் நிறைய பணத்தை போட்டுள்ளனர்.
இதனை கவனித்த கோவில் ஊழியர்கள் என்ன தவறு செய்தீர்கள் என கேட்டுள்ளனர்.
அவர்கள் ஜோகட்டே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகீம், அப்துல் தவ்பீக் ஆகிய நாங்கள் இந்த கோவில் உள்பட பல கோவில்களில் உண்டியல் பணத்தை திருடுவதை தொழிலாக வைத்து இருந்தோம்.
தற்போது நாங்கள் 2 பேரும் மனம் திருந்தி திருட்டு தொழிலை கைவிட்டுவிட்டு கோவிலில் மன்னிப்பு கேட்டு திருடிய பணத்தை உண்டியலில் போட வந்தோம் என்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து திருடிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சுவாரஸ்ய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.