பாகிஸ்தானிடம் இருந்து விமானப் படை வீரர் அபிநந்தனை மீட்டது போல என் கணவரை மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்டு தாருங்கள் என்று சி.ஆர்.பி.எப். வீரரின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் மட்டும் மாவோயிஸ்டுகளிடம் பிணைக் கைதியாக பிடிபட்டுள்ளார்.
இதனை மாவோயிஸ்டுகள் தரப்பு, பத்திரிகையாளர்கள் மூலமாக அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளனர்.
மேலும் சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை துன்புறுத்தாமல் விடுவிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் நேரில் சென்று இந்த தகவலை தெரிவித்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து அபிநந்தனை மீட்டது போல என் கணவரையும் மீட்டு தாருங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அந்த வீரரின் மனைவி மீனு மன்ஹாஸ் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் சத்தீஸ்கரை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரையும் மீனு மன்ஹாஸ் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாவோயிஸ்டுகளின் பிடியில் கணவர் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவதற்காக வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.