பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 சவரன் நகை, ரூ.28 லட்சம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரின் மகன் சபியுல்லா (வயது 54). இவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 வருடங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சபியுல்லா ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார் .
இந்நிலையில் அருகில் குடியிருக்கும் உறவினரான ஷியத்துல்லா என்பவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சபியுல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சபியுல்லா வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவைக் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது, மேலும் பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி ஆய்வாளர் கணபதி தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சபியுல்லா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்த போது ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சபியுல்லாவின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது அதில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிக்கு வந்து செல்பவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போலீஸார் தரப்பில் 120 சவரன் தங்க நகையும், சுமார் 47 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19 லட்சம் பணம் அருகில் இருந்த அறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ரூ.28 லட்சம் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வீரபாண்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.