புனேவைச் சேர்ந்த நடிகையும் அவரது காதலரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை ஈஷ்வரி தேஷ்பாண்டே, (25) மற்றும் அவரது காதலர் சுப்பம் டெட்ஜ், (28) ஆகிய இருவரும், கடந்த 15-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் நேற்று காலை கோவாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகிலுள்ள குறுகிய சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கார் நொறுங்கி ஆழமான பள்ளத்தில் விழுந்ததுள்ளது. சென்ட்ரல் லாக் காரணமாக இருவரும் காரிலிருந்து வெளியே வர முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
ஈஷ்வரியும் சுபாமும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அடுத்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், கார் விபத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இருவரின் உடல்களையும், காரையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
நடிகை ஈஷ்வரி புனேவில் உள்ள கிர்கத்வாடியில் வசித்து வந்த நிலையில், அவரது காதலர் சுபம், நான்டெட் நகர பகுதியில் வசித்து வந்தார்.
சிறுவயதில் இருந்து நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்த ஈஷ்வரி சமீபத்தில் தான் தனது மராத்தி மற்றும் இந்தி படங்களுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.
எனினும் போஸ்ட் புரொட்க்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..