மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள். விந்தையான சம்பவம்.
திருமணம் நடக்கும்போது மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது தான் சம்பிரதாயமாக நடந்து வருகிறது.
ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு ஜோடி விந்தையான முறையில் திருமணம் செய்துகொண்டது இன்டர்நெட்டில் வைரலாக மாறியது. பரம்பரையாக வரும் சம்பிரதாயத்திற்கு மாறாக தனுஜாவும் சார்தூல் கதமும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்த விந்தையான நிகழ்வு புனாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண் பெண் இருவரும் சமமே என்றும் பாலியல் சமத்துவத்தை தெரிவிக்க வேண்டுமென்றும் தீர்மானித்ததாகக் கூறிய அந்த இளைஞரை சமூக வலைதளத்தில் சிலர் ட்ரோல் செய்துள்ள போதும் மற்றும் சிலர் சபாஷ் என்று பாராட்டியுள்ளார்கள்.
என்ன நடந்தது என்று ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இதழில் சார்தூல் கூறிய விவரங்கள் இதோ…
தனுஜாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். ஆனால் அப்போது ஒருவருக்கொருவர் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்தோம். அவள் ஹிமேஷ் ரேஷ்மியா பாடலை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து டார்ச்சர் என்று தலைப்பிட்டு இருந்தார். அதற்கு நான் மிகப்பெரும் டார்ச்சர் என்று ரிப்ளை கொடுத்தேன். அவ்வாறு எங்கள் இருவர் இடையே பேச்சு ஆரம்பமானது. சில வாரங்களுக்குப் பிறகு தனுஜா டீ குடிக்கலாம் வருகிறாயா என்று கேட்டாள். அவ்வாறு நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக் கொண்டோம். பணி, திரைப்படங்கள், எதிர்காலம் குறித்து திட்டமிட்டோம். அவ்வாறு பல விஷயங்களை நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது பெண்ணியம், பெமினிசம் குறித்து எங்கள் பேச்சு திரும்பியது. நான் ஒரு ஹார்ட்கோர் ஃபெமினிஸ்ட் என்று திட்டவட்டமாக கூறினேன். நான் அவ்வாறு கூறுவேன் என்று எதிர்பார்த்ததாகக் கூறி அவள் என் பக்கம் பார்த்தாள். அப்போதிலிருந்து எங்கள் இருவரின் இடையில் நட்பு இன்னும் தீவிரமானது. பணி முடிந்த பிறகு இருவரும் சந்திப்போம்.
ஒருநாள் என் பிறந்தநாளுக்கு அவள் கையால் தயாரித்த கிரீட்டிங் கார்டு கொடுத்தாள். அன்று உன்னை எனக்கு பிடிக்கும் என்று நான் கூறி விட்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் கூட என்னை பிடிக்கும் என்று கூறினாள். அதன் பிறகு டேட்டிங் ஆரம்பமானது. இருவரும் காதலில் விழுந்தோம். எங்கள் பெற்றோருக்கு இந்த விஷயத்தை கூறுவதற்கு முன்பாக ஓராண்டுகாலம் டேட்டிங்கில் கழித்தோம்.
அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சென்ற ஆண்டு செப்டம்பரில் கொரோனா முதல் அலை வந்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம்.
பெண்களே ஏன் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று தனுஜாவிடம் ஒரு நாள் நான் கேட்டேன். ஆண் பெண் இருவரும் சமமே அல்லவா? பின் அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லை என்று வாதிட்டேன். திருமணத்தன்று நானும் தாலி கட்டிக் கொள்வேன் என்று கூறினேன். இதனால் என் பெற்றோர் வியந்து போயினர். ஏன் இப்படி செய்கிறாய் என்று சில உறவினர்கள் கேட்டபோது சமத்துவத்திற்காக என்று பதிலளித்தேன். சில காரணங்களால் பெண்ணின் உறவினர்களே அனைத்து செலவுகளையும் ஏற்கிறார்கள். நான் தனுஜாவின் பெற்றோரிடம் திருமண செலவுக்கு சரிசமமாக நானும் செலவழிப்பேன் என்று கூறினேன். திருமணத்திற்கு முதல் நாள் என்று நினைக்கிறேன்… தாலியை ஒரே ஒரு நாள்தான் கட்டி கொள்வாயா அல்லது தினமுமா என்று தனுஜா என்னை கேட்டாள். தினமும் கட்டிக் கொள்வேன் என்று சொன்னேன்.
திருமண கொண்டாட்டங்கள் நடந்தபோது நானும் தனுஜாவும் தாலி கட்டிக்கொண்ட சந்தர்ப்பத்தில் மிகவும் ஆனந்தம் அடைந்தேன். நான் செய்த செயல் பற்றி சில உறவினர்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றாலும் எங்களை எதுவும் கூற முடியாமல் மௌனம் வகித்தார்கள்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு மறுநாள் இன்டர்நெட்டில் எங்கள் இருவரின் மீதும் பயங்கரமான ட்ரோல்ஸ் வந்தன. மீடியாவில் வந்துவிட்டதால் பலர் காமென்ட் செய்யத் தொடங்கினார்கள். இனி புடவையும் கட்டிக்கோ என்று ஏளனம் செய்கிறார்கள். சிலர் உதார வாதிகள் கூட ஆண்பெண் சமத்துவத்தை முன்வைப்பதற்கு இதுவல்ல வழி என்று என்னை ட்ரோல் செய்வது விந்தையே… நான் செய்த செயலுக்கு ட்ரோல்ஸ் வரும் என்று நான் ஊகித்தேன். ஆனாலும் இத்தனை வருமென்று மட்டும் எதிர்பார்க்கவில்லை.
முதலில் தனுஜா சிறிதளவு பாதிக்கப்பட்டாலும் அதன் பின் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் எங்கள் இருவரின் உறவை பற்றி வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு ஒருவருடைய கனவை ஒருவர் நம்பிக்கையோடு நனவாக்குவதற்கு இருவரும் சேர்ந்து எங்கள் பயணத்தை தொடர்கிறோம். அதனால் இந்த உலகம் என்ன சொல்கிறது என்று நாங்கள் கவலைப்படவில்லை என்று நடந்த விஷயத்தை விவரித்தார்.
சார்தூல், தனுஜாவின் காதல் திருமண விவகாரம் இன்டர்நெட்டில் வைரலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் 82 ஆயிரத்துக்கு மேலாக லைக்குகள் வந்து குவிந்தன. ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கில் லைக் செய்து வருகிறார்கள். சார்தூலின் முடிவு பெருமைக்குரியது என்று சில நெட்டிசன்கள் அந்த தம்பதிகளை ஆசீர்வதித்து இந்த தம்பதிகள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். “மணமகனின் அபிப்பிராயங்களை மதிக்கிறோம். அவர் தவறு செய்தார் என்று நாங்கள் நினைக்கவில்லை. சமத்துவத்திற்கு அடையாளமாக தாலி கட்டுவதன் மூலம் தன்னுடைய எண்ணத்திற்கு அவர் வடிவம் கொடுத்துள்ளார்”என்று ஒரு நெடிசன் பாராட்டியுள்ளார்.