ஜெய்ஹிந்த் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது…
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக உளவு அமைப்புகள் ஒரு தகவலை அனுப்பியுள்ளன. இந்தக் குறிப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது திமுக பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் அண்மையில் தொடங்கியது.
ஆளுநர் உரையின் இறுதியில் வழக்கமாக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை, நாடு வெல்லட்டும் என்ற பொருளில் இடம்பெறும்.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள நாஞ்சில் மண்ணைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை உருவாக்கிய சொல்… அதை தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தில் இடம்பெறும் ஆளுநர் உரையில் இருந்து நீக்கி இருப்பது தேச விரோத செயல் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கருத்துக்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள மத்திய உளவு அமைப்புகள் மூன்று பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளன.
ஆளுநர் உரையில் முதலில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அதை நீக்கி முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அமித் ஷாவுக்கு அதிர்ச்சி அளித்தது என்பதைவிட கோபத்தையே அதிகம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலில் ஒன்றிய என்ற சொல்லை பயன்படுத்தி பிரிவினை வாதத்தை மீண்டும் தொடங்கி வைத்தவர் தியாகராஜன் தான் … அதுபோல் ஜெய்ஹிந்த் என்ற சொல்லையும் நீக்கி இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
சபையில் பாஜகவுக்கு 4 உறுப்பினர்கள் இருந்தபதும் இதை உடனடியாக கண்டித்து வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தது சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இனி சட்டசபை கூடும் போதெல்லாம் சபையில் ஜெய்ஹிந்த் என கோஷம் எழுப்பும் படி கட்சி எம்எல்ஏக்கள் அறிவுறுத்தப் படக்கூடும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமித்ஷா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.