நாசிக்கில் நள்ளிரவில் பங்களா வீட்டில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகைகள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் உள்ளிட்ட 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் போதை விருந்து நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நள்ளிரவில் போலீஸார் அந்தப்பகுதிக்கு விரைந்தனர். ஸ்கை தாஸ், ஸ்கை லாகூன் என்ற இரண்டு சொகுசு பங்களாவுக்கு வெளியே சொகுசு கார்கள் அணிவகுந்து நின்றுள்ளன.
நள்ளிரவில் சொகுசு பங்களாவில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்துக்கொண்டிருந்தன. போதை விருந்து நடப்பதை உறுதி செய்த போலீஸார் பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் அங்கு தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 22 பேரை போலீஸார் கைது செய்தனர் அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நாசிக் போலீஸ் அதிகாரிகள். ‘ போதை விருந்து நடப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு சொகுசு பங்களாவுக்கு விரைந்தோம்.
அந்த பங்களாவில் இருந்த ஆண்களும் பெண்களும் போதை பொருள்கள்,ஹூக்காபயன்படுத்தி இருந்தனர். 12 பெண்கள், 10 ஆண்களை கைது செய்துள்ளோம்.
இந்த 12 பெண்களில் ஒருவர் டிவி ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் பங்கேற்றவர். தென்னிந்திய நடிகைகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த போதை விருந்தை ஏற்பாடு செய்த நபரை தேடி வருகிறோம்.பங்களாவில் இருந்து கேமரா போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக நைஜீரிய பெண் ஒருவர் மும்பையில் பிடிபட்டுள்ளார். எனவே சிறப்பு பிரிவினர் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக’ கூறினர்.