உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியர் சம்பத்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார்.
கே.வி. சம்பத்குமார் இந்தியாவின் ஒரே சம்ஸ்கிருத நாளிதழான சுதர்மா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். கடந்த 31 வருடங்களாக இதை தொய்வின்றி நடத்தி வந்தார். இவர் புதன்கிழமை நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.
சுதர்மா இதழ் இவரது தந்தை கலாலே நடாதூர் வரதராஜ ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது. மைசூரு நகரத்தைச் சேர்ந்த மிகப்பெரும் சம்ஸ்கிருத அறிஞரான இவர் 1970 ஜூலை 15-ஆம் நாள் இதனை நிறுவினார். 1990 ஆம் வருடம் அவரது மறைவுக்குப் பிறகு சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி விதூஷி கே எஸ் ஜெயலட்சுமி ஆகியோர் இந்த இதழை ஏற்று திறம்பட நடத்தி வந்தனர்.
சுதர்மா இதழுக்கு 3,500 அதிதீவிர வாசகர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். இவர் பின்னாளில் இந்தப் பத்திரிகையினை இணையதள வடிவமாக ஆன்லைன் எடிஷன் என கொண்டு வந்தார். அதன் மூலம் உலக அளவில் சுதர்மா சம்ஸ்கிருத பத்திரிக்கையை கொண்டுசென்ற சிறப்பை பெற்றார்.
சம்பத்குமார் நஞ்சன்கூடு நகரில் உள்ள கலாலே கிராமத்தில் பிறந்தார். இவர் பிகாம் மற்றும் பிஎல் பட்டங்களைப் பெற்றார். மகாராஜா சம்ஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்ற இவர் தமது தந்தைக்கு உதவியாக சமஸ்கிருதம் தொடர்பான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
சுதர்மா பத்திரிகையின் பொறுப்பை நிர்வகிப்பது முதல் அனைத்து பணிகளையும் கவனித்து வந்த இவர், மைசூரு நகரில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் கொண்டு வந்த முதல் நபர். 1988 இல் இவரது அச்சுக் கூடம் இங்கே தொடங்கப் பெற்றது.
இவர் 2009 இல் நாட்டின் முதல் சமஸ்கிருத கேலண்டர் – நாள்காட்டியை கொண்டு வந்தார். இவர் சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். இவர்களது பணிகளைப் பாராட்டி, கடந்த 2020 ஆம் வருடம் இவருக்கும் இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் கலை இலக்கியம் கல்வி இதழியல் துறைக்கான பத்மஸ்ரீ விருது பாரத அரசால் வழங்கப்பட்டது!