திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான 38 வயது பெண்ணிடம், எதிர்வீட்டில் வசித்து வந்த மனைவியை பிரிந்து வாழும் 48 வயது நபர், அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த நிலையில், தொல்லை கொடுத்துவந்த அந்த நபர் மீது கணவன் – மனைவி இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெங்களூருவின் விஸ்வேஸ்வரய்யா லேஅவுட்டின் முதினபாலயா பகுதியில் வசித்து வருபவர் 48 வயதாகும் உத்தம். இவருடைய மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றதால் கடந்த 8 மாதங்களாகவே இவர் தனியாக தான் வசித்து வந்திருக்கிறார்.
உத்தமின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் ரேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
வயது 38. ரேஷ்மாவுக்கு திருமணமாகி 12 மற்றும் 15 வயதுடைய தன்னுடைய குழந்தைகளுடனும், கணவருடனும் வசித்து வருகிறார்.
48 வயதாகும் உத்தம் தன்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததுடன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, அன்னபூர்னேஷ்வரி காவல்நிலையத்திற்கு கணவருடன் வந்த ரேஷ்மா புகார் அளித்திருக்கிறார்.
புகாரில் குறிப்பிட்டுள்ளவை அதிரவைப்பதாக உள்ளது., ரேஷ்மா எப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதை உத்தம், வேலையாக செய்து வந்திருக்கிறார்.
ரேஷ்மா வெளியே வரும் போது உத்தம் அவருடைய வீட்டில், கதவு, ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு உள்ளாடை மட்டும் அணிந்தவாறு மொபைலில் சத்தமாக பேசுவாராம். அந்த பேச்சும் ரேஷ்மாவை வம்பிழுப்பதாகவும், அவரை வர்ணிப்பதாகவும் இருந்திருக்கிறது.
உத்தமின் இது போன்ற பாலியல் தொல்லைகளை, கணவரிடம் சொல்வதனால் பிரச்னைகள் ஏற்படும் எனவும் இது தானாகவே சரியாகி விடும் என கருதி இது குறித்து தனது கணவரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் அவர் நினைத்தது போல அல்லாமல் அந்த பிரச்னை பெரிதாகியே வந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தனது வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டிச் சென்று விட்டு ரேஷ்மா வீடு திரும்பிய போது, அவருடைய வீட்டின் கேட் முன் உத்தம் வழியை மறித்து நின்று கொண்டு ரேஷ்மாவை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது ரேஷ்மா கேள்வி கேட்ட போது அவரிடம் நெருங்கி வந்து, முந்தைய நாள் சைட் டிஷ் கேட்டதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த சமயம் ரேஷ்மாவின் கணவர் வெளியே வந்து உத்தமிடம் விசாரித்த போது, தனது வீட்டுக்குள் செல்வதற்காக நடந்துள்ளார். ரேஷ்மாவை ரொம்ப பிடித்திருக்கிறது என அவரின் கணவரிடம் கூறிய உத்தம், திடீரென ரேஷ்மாவின் ஆடையை பிடித்து இழுத்திருக்கிறார்.
பின்னர் ரேஷ்மாவின் கணவரை திட்டித் தீர்த்த உத்தம், கணவர் கண் எதிரிலேயே ரேஷ்மாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
உடனடியாக இது குறித்து ரேஷ்மாவும். அவரின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.
பாலியல் தொல்லை அளித்த புகாரில் உத்தமை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர்