உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி கிரண். இவர்களுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் இருந்தார். நேற்று லலித் வேலைக்கு சென்று விட்டார். கிரண் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஜோத்னா தனது செல்லப் பிராணியான நாயுடன் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
பால்கனியில் உள்ள கிரில்லில் நாய் சிக்கிக் கொண்டது.
அந்த நாய் கீழே விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது. இதனால் சிறுமி ஜோத்னா தனது செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்றார். ஆனால் பரிதாபமாக அவர் 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்தார். மாடியில் இருந்து விழுந்து நாயும் இறந்து போனது. நாயை காப்பாற்ற போய் 9-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் உடற்கூராய்வு ஆய்வு அறிக்கையை வாங்குவதற்கும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கும் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ‘இது விபத்து’ என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ’12 வயது சிறுமி ஜோத்னா சர்மா, அவரது அறையில் 5 மாத நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அறையிலிருந்து வெளியே ஓடிய நாய்க்குட்டி பால்கனியிலுள்ள கிரில் கேட்டில் மாட்டியுள்ளது. உடனே, பால்கனி சுவரில் ஏறி நாயைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
புறா போன்ற பறவைகள் வீட்டுக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்டிருந்த நைலான் நெட்டை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாயைப் பிடித்து இழுக்க முயற்சி செய்துள்ளார்.
நைலான் நெட் அந்தச் சிறுமியின் எடையை தாங்காமல் பிய்ந்துவிட்டது. பால்கனியில் சில விநாடிகள் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி காப்பற்றுவதற்கு குரல் எழுப்பியுள்ளார். அவர், ஒரு கையால் நாயின் தலையை பிடித்துக் கொண்டிருந்தார். சமையலறையிலிருந்து அவரது அம்மா வருவதற்குள் தவறி கீழே விழுந்துவிட்டார்.
நாயும், சிறுமியும் 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்தனர். நாய் கீழே விழுந்த உடன் உயிரிழந்துவிட்டது. உயிருக்குப் போராடிய சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்’ என்று தெரிவித்தார்.