திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவநீத சேவை என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை துவங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், டோலோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஏகாந்த சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தினமும் நடத்தப்படுகின்றன.
இது தவிர விசேஷ பூஜை அபிஷேகம், திருப்பாவாடை சகஸ்ர கலசாபிஷேகம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகிய சேவைகள் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாட்களில் வாராந்திர சேவைகளாக நடத்தப்படுகின்றன.
இவை தவிர மாதாந்திர, வருடாந்திர சேவைகளும் ஏழுமலையானுக்கு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கோகுலாஷ்டமி தினமான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையில் கீர் பசுக்கள் ஆன நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணை பெறப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் அந்த வெண்ணை கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வெண்ணெயை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.
நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
மேலும் பக்தர்களாகிய ஸ்ரீவாரி தொண்டர்கள் கோசாலையில் வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பக்தர்கள் தயாரித்த வெண்ணெய் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.