இந்தியா-இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட், மூன்றாவது நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா 191 மற்றும் 3 விக்கெட் இழப்பிற்கு 270 (ரோஹித் 127, புஜாரா 61); இங்கிலாந்து 290; இந்தியா 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ரோஹித் ஷர்மாவின் இந்தியாவுக்கு வெளியே அடித்துள்ள இந்த முதல் டெஸ்ட் சதத்திற்காக அவரும் நாமும் இத்தனை நாள் காத்திருந்தது வீண்போகவில்லை.
அவர் நேற்று அடித்த சதம் ஓவல் மைதானத்தில் இந்தியாவை ஆதிக்கம் பெற வைத்தது. ரோகித் முதல் விக்கட்டிற்கு ராகுலுடன் 83 ரன்கள் சேர்த்தார்; இரண்டாவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் 153 ரன்களைச் சேர்த்தார்.
அவர் இருண்ட, மேகமூட்டமான சூழ்நிலையில் ஏறத்தாழ எட்டு மணி நேரம் பேட் செய்தார், மொயீன் அலி வீசிய பந்தை லாங்-ஆன் மீது ஆறு ரன்னுக்கு அடித்து 94இலிருந்து தனது சதத்தினை அடைந்தார்.
அவர் இறுதியில் வினோதமான முறையில் அவுட்டானார். ‘ஒலி ராபின்சன்’ இரண்டாவது புதிய பந்தை ஆடுகளத்தில் வீசியபோது அதனை லாங்-லெக் பகுதிக்கு இழுத்து அடிக்க முயன்று, கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிருந்தது. ரோஹித்திற்கு நேற்று அதிர்ஷ்டம் அதிகமாகவே உதவியது.
இரண்டாவது ஸ்லிப்பில் ரோரி பர்ன்ஸுக்கு அவர் இரண்டு வாய்ப்புகளை வழங்கினார், ஆனால் பர்ன்ஸ் கேட்ச் பிடிக்கவில்லை. முதல் வாய்ப்பு இரண்டாம் நாள் ரோஹித் ஆறு ரன் மட்டுமே எடுத்தபோது நடந்தது. இரண்டாவது வாய்ப்பு ரோஹித் 31 ரன் எடுத்தபோது வந்தது, ஒலி ராபின்சன் வீசிய பந்தில் ஒரு கடினமான வாய்ப்பு அது. அதனையும் பர்ன்ஸ் தவறவிட்டார்.
புஜாரா தனது இன்னிங்ஸை பிரகாசமாகத் தொடங்கினார். இங்கிலாந்தின் மாற்று பந்து வீச்சாளர்களிடமிருந்து சில மோசமான பந்துவீச்சு அவருக்கு உதவியது. ஆனால் மதிய உணவுக்குப் பிறகு புஜாராவுக்கு காயம் ஏற்பட்டது. தனது கணுக்காலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு சுமார் ஏழு நிமிடங்கள் சிகிச்சை பெற்றார். ரோஹித், கிரெய்க் ஓவர்டன் பந்தில் இரண்டு ரன் எடுத்து அரைசதம் அடித்தார். புஜாரா சரளமாக பேட் செய்தார். ஓவர்டனின் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.
ரோஹித் இந்தியாவில் சிறப்பாக விளையாடுவார்; வெளி நாடுகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அவர் இன்னும் கிரிக்கட்டின் அனைத்து வடிவ விளையாட்டுகளிலும் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதற்கு நேற்று அடித்த சதமே சான்று. இந்தத் தொடரில் இது அவரது மூன்றாவது 50+ ஸ்கோர் மற்றும் அவரது எட்டாவது டெஸ்ட் சதமாகும் – அவற்றில் மூன்று ஒரு சிக்ஸருடன் அடிக்கப்பட்டது.புஜாரா தனது அரைசதத்தை – மூன்று இன்னிங்சில் தனது இரண்டாவது – தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஓவர்டனை ஸ்ட்யரிங் செய்வதன் மூலம் பெற்றார்.
இங்கிலாந்து இரண்டாவது புதிய பந்து எடுத்த பிறகு பௌன்சர்கள் வீசுவதிலேயெ செலவழித்தனர். இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படவில்லை. புஜாரா அவுட் ஆனதும் ஜடேஜா கோலியுடன் சேர்ந்து விளையாடினார். முதல் இன்னிங்சில் அவர் 5ஆவது வீரராக களமிறங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே நடந்தது. இவர் கோலியுடன் சேர்ந்து நன்றாக விளையாடினார். இன்று (05.09.2021) நான்காவது நாள் காலையில் அவர்கள் 171 என்ற முன்னிலையுடன் மீண்டும் ஆடத் தொடங்குவார்கள். மூன்றாம் நாள் ஆட்டம் இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான நாள்.