பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேசிய புலனாய்வுத் தொகுப்பு எனப்படும் NATGRID ஐ தொடங்கி வைக்கவுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது “இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை” வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த தகவல்களின் தடையற்ற மற்றும் பாதுகாப்பான தரவுத்தளமாக (டேடாபேஸ் பகிர்வு) உருவாகும் NATGRID அமைப்பு, விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார்.
“கொரோனா தொற்றால் விளைந்த நெருக்கடி இல்லாதிருந்தால், பிரதமர் NATGRID ஐ நாட்டிற்கு முன்பே அர்ப்பணித்திருப்பார் என்று, செப்.4 ஆம் தேதி அன்று, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (பிபிஆர்டி) 51 வது நிறுவன நாள் நிகழ்வின் போது இதைத் தெரிவித்திருந்தார் அமித் ஷா,.
‘பயங்கரவாதம், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையிலான, ‘நேட்கிரிட்’ எனப்படும் தேசிய உளவு தொகுப்பு அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்வார்’ என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008 நவ., 11ல் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடமாட்டம், தாக்குதல் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முக்கிய தரவுத் தளம் அமையவில்லை என்ற குறைபாட்டை அந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், உளவு அமைப்புகள் உட்பட அரசின் பல அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், நேட்கிரிட் அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் புதிய அமைப்பின் வாயிலாக உளவு அமைப்புகள் உட்பட அரசின் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதை மற்ற அமைப்புகளும் பயன்படுத்த முடியும்.
நம் நாட்டுக்குள் விமானங்களில் வருவோர், செல்வோர் குறித்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். அதேபோல் வங்கிகள் வாயிலாக செய்யப்படும் அதிக முதலீடுகள், பரிவர்த்தனைகள் என பல தரப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.
இதன் வாயிலாக, பயங்கரவாதம், பொருளாதார குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளவர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
முதல் கட்டமாக 10 உளவு அமைப்புகளும், 21 சேவை அமைப்புகளும் இதில் இணைக்கப்பட உள்ளன. படிப்படியாக நாட்டில் உள்ள அரசின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும்.
NATGRID தரவுத்தளத்தை அணுகுவதற்கான அங்கீகாரத்தை நாட்டின் முக்கிய கூட்டாட்சி அமைப்புகள் பெற்றுள்ளன. சி.பி.ஐ., வருவாய் புலனாய்வு, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரி வாரியம், கேபினட் செயலகம், ஜி.எஸ்.டி., கண்காணிப்பு அமைப்பு, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு என பல உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் தொகுப்பாக நேட்கிரிட் இருக்கும்.
இந்த அமைப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அமைப்பை அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 மற்றும் 2009க்கு இடையிலான கால கட்டத்தில், அமெரிக்க பயங்கரவாத சந்தேக நபரான டேவிட் ஹெட்லியின் இந்திய பயணங்கள், அடிக்கடி வந்து சென்ற தகவல்கள், நடவடிக்கைகள் குறித்த உளவுத் தகவலைச் சேகரிப்பதில் கண்ட இடர்ப்பாடுகள் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப் படுகிறது.
வெளிநாட்டினர் உட்பட 166 பேரைக் கொன்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவுக்கு, தாக்குதல் இலக்குகளின் முக்கிய தகவல்களையும் வீடியோக்களையும் ஹெட்லி வழங்கியிருந்தார்.
பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு (CCS) 2010 இல் ₹ 3,400 கோடி NATGRID திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் 2012 க்குப் பிறகு அதன் பணிகள் மந்தமானது. எனினும் 2014 இல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாட்கிரிட்டின் மறுமலர்ச்சிக்கான வழிமுறைகளை உடனே வழங்கினார். இதை அடுத்து இந்தத் தொகுப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.