12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும், அடுத்து வரும் மார்ச் மாதம் முதல் மாணவ, மாணவியருக்கு தினம்தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்கள், அடுத்து வரும் தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் மேலும் 312 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்காக 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வார இறுதி நாட்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுத்தேர்வுகள் முடிந்ததும் நாள்தோறும் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்று அது கூறியுள்ளது.