எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு ‘நீட்’ நுழைவுத் தேர்வு வரும் மே 6ல் நடைபெறும் என்று சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கை ‘நீட்’ எனப்படும் தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.
இந்தத் தேர்வுகளை மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்துகிறது. இதுதொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.
அதில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1,400 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.
நீட் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.