
குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் புகழ்பெற்ற அம்பாஜி கோவில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தை ஒட்டிய அரவல்லியை இணைக்கும் சாலையில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது. பக்தர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தின் கலோல் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரவல்லி மாவட்ட கலெக்டருக்கு முதல் மந்திரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலக ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “குஜராத் மாநிலம் அம்பாஜியில் நேரிட்ட விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்