
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிலர் கடந்த திங்கள்கிழமையும் சிலர் செவ்வாய்க்கிழமையும் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று 21 ஆக அதிகரித்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்குக் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தக் குழு உயிரிழந்தவர்களின் கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளது.
பிகாரில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் மது விற்பனை செய்யவும் அருந்தவும் மாநில அரசு தடை விதித்தும் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்கின்றன.