தில்லியில், வரும் ஜனவரி 5-ம் தேதி, ராஜராஜ சோழன், ராஜேந்திரன் சோழன் பற்றிய சர்வதேச மாநாட்டுக்கு, பா.ஜ.க ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
‘பிரவாசி பாரதிய திவஸ்’ எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு, ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் நடக்கவுள்ளது.இதற்காக, ஜனவரி முதல் வாரத்திலேயே வெளிநாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவழியினர் வருகை தர உள்ளனர். மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசீயஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள், இந்துார் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அவர்களும், மற்ற இந்திய வம்சாவழியினரும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றியும், இந்தியாவை தாண்டி, மலேஷியா வரை நடந்த சோழர்களின் ஆட்சி பற்றியும் தெரிந்து கொள்வதற்காக, ஜன., 5ல் தனி மாநாடு நடத்தப்பட உள்ளது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, அகண்ட தமிழ் உலகம் அமைப்பு, டில்லி பாரத் பாரதி, பா.ஜ.க ஆதரவாளர்கள் இணைந்து, இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடக்கும் மாநாட்டில், பல்கலை துணை வேந்தர் சாந்திஸ்ரீ, தமிழக பா.ஜ.க துணைத் தலைவரும், பேராசியருமான கனகசபாபதி, ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.