மாண்புமிகு இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்கள் பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகள் 18ஆவது தேசிய ஜம்போரியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்…
(தமிழில்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்)
பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் 18ஆவது தேசிய ஜம்போரியில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாடு முழுவதிலுமிருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் இங்கு கூடியிருப்பதாக நான் அறிகிறேன். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன், மற்ற நாடுகளைச் சேர்ந்த சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளையும் வரவேற்கிறேன்.
நீங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் இருப்பது “Be Prepared” அதாவது “தயாராக இருங்கள்” என்ற உங்கள் குறிக்கோளுக்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இளைஞர்களின் இந்த மாநாட்டில், இந்த வாக்கியம் புத்தாண்டில் ஒரு புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் நிரப்பும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் முழு குழுவையும் பாராட்டுகிறேன்.
சாரணர் மற்றும் வழிகாட்டிகள் எந்த வேலை செய்தாலும் அதை முழு மனதுடன் செய்கிறார்கள். அதனால்தான், சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் கைகுலுக்கும்போது, அவர்கள் இடது கையை நீட்டுகிறார்கள். ஒவ்வொரு மனிதனின் இதயமும் இடது பக்கத்தில்தான் இருக்கிறது என்ற ஆழமான சிந்தனை இதற்குப் பின்னால் இருக்கிறது. நாட்டின் 63 லட்சத்துக்கும் அதிகமான சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் முழு மனதுடன் பணிபுரிவது நமது நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
இதுமட்டுமின்றி, உலகம் முழுவதிலும் உள்ள சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் உடல், மனம் மற்றும் செல்வத்துடன் மற்றவர்களின் நலன் கருதி, முழுமை உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இது முழு மனித குலத்திற்கும் நல்லது. இந்த மனிதாபிமானம் மற்றும் அன்பின் உணர்வை அனைவரும் இந்தக் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்டு அதை அவர்கள் வாழ்வில் பதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
1956இல் ஜெய்ப்பூர் நடத்திய தேசிய ஜம்போரியை கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ராஜஸ்தான் நடத்துகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஜம்போரி அப்படியொரு மைதானத்தில் தைரியம் மற்றும் வீரத்தின் சின்னமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஜம்போரி நடப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிக சாரணர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநிலத்தின் விருந்தினர்களாகிய நீங்கள் அனைவரும் – விருந்தோம்பல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இங்கே அனுபவிப்பீர்கள்.
சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பெருமைமிக்க வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. லார்ட் ராபர்ட் பேடன் பவுல், இளைஞர்களை சேவை மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்தப் பணியைத் தொடங்கினார். இது இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே சிறிய மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அபிமானிகளில் மகாத்மா காந்தி மற்றும் பிற சிறந்த சுதந்திரப் போராளிகளும் அடங்குவர்.
இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்த பிரச்சாரம் தொடர்பான சில தப்பெண்ணங்கள் இருந்தன, இது சுதந்திரத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில், இது படிப்படியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் நாட்டிலேயே மிகப்பெரிய தன்னார்வ, அரசியல் சார்பற்ற, சீருடை அணிந்த இளைஞர் அமைப்பு மற்றும் கல்வி இயக்கம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மதம், இனம் அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் சிறுவர் மற்றும் சிறுமிகளின் குணாதிசயத்தை உருவாக்குகிறது. 63 லட்சத்திற்கும் அதிகமான சாரணர் மற்றும் வழிகாட்டி உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள அமைப்பு, உலகின் மிகப்பெரிய சாரணர் மற்றும் வழிகாட்டி அமைப்புகளில் ஒன்றாகும்.
இந்த அமைப்பில் பெண் குழந்தைகள் அதாவது Guides என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வழிகாட்டிகளின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு நல்ல எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வேண்டும். நான், சமூகம் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக கடுமையான ஒழுக்கம் மற்றும் சுய ஒழுக்கம் போதிக்கின்ற இந்த முன்னேற்றப் பாதையில் இறங்கிய அனைத்து சிறுமிகளையும் நான் குறிப்பாக வாழ்த்துகிறேன்.
அன்புள்ள சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளே, சாரணர் அல்லது வழிகாட்டியாக பயணத்தைத் தொடங்கும் முன் நீங்கள் ஏற்றுக்கொள்கிற வாக்குறுதி என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் நீங்கள் தனிப்பட்டவர லாபத்திற்காக அல்ல, சமூகத்தின் கூட்டு நலனுக்காக, உடல் ரீதியாக வலுவாகவும், மன ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் உறுதியுடன் இருப்போம் என்று உறுதி ஏற்கிறீர்கள். உண்மையில், நீங்கள் நம்பிக்கை, விசுவாசம், சகோதரத்துவம், பணிவு, இயற்கையை நேசித்தல், ஒழுக்கம், தைரியம் மற்றும் சிக்கனம் போன்ற குணங்களைக் கடைப்பிடிக்க முயற்சிக்கும் உறுதியான வாக்குறுதியை அளிக்கிறீர்கள். இந்த அனைத்து பண்புகளையும் நான் உணர்ந்து பின்பற்றும் போது உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் உயர்ந்த உணர்வு என்று நான் பார்க்கிறேன்.
நீங்கள் ஒரு வளமான பாரம்பரியத்தின் வாரிசு. மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தின் வெற்றியாளர், இனவெறிக்கு எதிராக வீரத்துடன் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒரு சாரணர். தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய பில் கேட்ஸ், சாரணராகவும் பணியாற்றினார். அவரது சேவைகளுக்காக அமெரிக்காவின் உயரிய பாய் சாரணர் விருதான சில்வர் எருமை விருதையும் அவர் பெற்றுள்ளார். இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. அவர்களின் வெற்றிக்கான காரணம் உலகளாவிய மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள் ஆகும். இந்த சாரணர் பயிற்சியை நீங்கள் கட்டாயம் என்று கருத வேண்டாம் என்பதே உங்கள் அனைவருக்கும் எனது அறிவுரை. இங்கு நீங்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள் எண்ணற்ற வழிகளில் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும். இந்த குணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை.
பெரியோர்களே, தாய்மார்களே, COVID-19 தொற்றுநோய்களின் போது கூட, பாரத் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் சமுதாயத்திற்கு சேவை செய்வதில் முன்மாதிரியான தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர்கள் முன்னணி கோவிட் போர்வீரர்களாக செயல்பட்டதாக எனக்கு கூறப்படுகிறது. சமூக இடைவெளியைப் பேணுதல், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் போக்குவரத்து மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதில் நீங்கள் உதவியுள்ளீர்கள். நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள்.
என் அன்பான சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளே,
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானது. உயரும் வெப்பநிலை, கடல் மட்டம் மற்றும் தீவிர வானிலை ஆகியவற்றின் விளைவுகள் மிகவும் வெளிப்படையானவை. காலதாமதமாகும் முன் நாம் உடனடியாக திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், கார்பன் தடயத்தைக் குறைப்பதன் மூலம், மற்றும் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் பொது விழிப்புணர்வின் இந்த முயற்சியில் நீங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.
இமயமலை முதல் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள காடுகள் வரை பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கு இனங்கள் நம்மிடம் உள்ளன. சாரணர் மற்றும் வழிகாட்டியாக, உயிர்-பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பது உங்கள் கடமையாகும்.
இந்தியா இன்று உலகில் இளம் நாடாகக் கருதப்படுகிறது. இந்த இளைஞர்களின் கூட்டம் ஒரு மினி இளம் இந்தியாவின் அடையாளமாகும். தேசத்தின் வருங்கால கட்டமைப்பாளர்கள் நீங்கள். எதிர்கால இந்தியாவின் அழகிய வடிவத்தை உருவாக்குவது உங்கள் பொறுப்பு. நாடு ‘சுதந்திரத்தின் அம்ரிதப் பெருவிழாவைக்” கொண்டாடுகிறது, மேலும் ‘அமிர்த காலத்தில்’ நுழைந்துள்ளது. சமூகம் மற்றும் தேசம் எதிர்கொள்ளும் எதிர்கால சவால்களை, எதிர்கொள்ளும் பெரிய இலக்கை நோக்கி முன்னேறுமாறு நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். உலகம் வேகமாக மாறுகிறது, நீங்கள் ‘எதிர்காலத்திற்கு தயாராக’ இருக்க வேண்டும்.
எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான முதல் படி உங்களை நம்புவதும், நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்பதில் முழு நம்பிக்கை வைப்பதும்தான். அதே சமயம் எத்தகைய தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் என்ற தைரியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். நான் உலகின் மிகவும் பிரபலமான சாரணர்களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைக் குறிப்பிட்டேன். அவர் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் உரிமைகள் இயக்கம் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் போது பாடப்பட்ட பாடல் இன்றும் உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த உத்வேகம் தரும் பாடலின் தொடக்கத்திலும் முடிவிலும், மக்கள் ஒன்றாகப் பாடுகிறார்கள்: We shall overcome. அதாவது நாம் வெற்றி பெறுவோம்.
நீங்கள் அனைவரும் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் உங்கள் மனதில் உங்கள் வெற்றியில் முழு நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். அப்படிச் செய்தால் வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடும் என்று உறுதியளிக்கிறேன்.
முடிவில், இந்த முக்கியமான நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கம் தொடர்ந்து செழித்து வருங்கால சந்ததி இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வாழ்த்துகிறேன்.
நன்றி,
ஜெய்ஹிந்த்.
ஜெய் பாரத்!