India – The Mother of Democracy
நண்பர்களே, இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். சில வாரங்கள் முன்பாகத் தான் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பெயர் India – The Mother of Democracy, இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன.
பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடிநரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான்.
டாக்டர். அம்பேட்கர் அவர்கள் பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரதநாட்டுப் பாராளுமன்றத்தோடு ஒப்பிட்டார்கள். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.
உலகை அதிசயிக்க வைக்கும் உத்திரமேரூர்
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது என்பதையறிந்து உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும்.
வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்லபல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.