மதிப்புள்ளதாக்கும் மின்கழிவுகள்
நண்பர்களே, இன்று அனைத்து இல்லங்களிலும் செல்பேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன. நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன்கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், Circular Economy எனப்படும் சுற்றுப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என்கிறது.
இது என்ன அளவு என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? மனித வரலாற்றிலே எத்தனை வர்த்தகரீதியான விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தின் எடையையும் ஒன்று கூட்டினாலும் கூட, வெளியேற்றப்படும் மின்பொருள் கழிவுகளுக்கு நிகராகவே ஆக முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுவது போன்று உள்ளது.
பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும் என்பது உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். இதிலே தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியன அடங்கும். ஆகையால் மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதற்கு எந்த வகையிலும் குறைவல்ல. இன்று, இந்தத் திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் எந்தக் குறைவும் இல்லை. இன்று சுமார் 500 மின் பொருள் கழிவு மறுசுழற்சியாளர்கள் இந்தத் துறையோடு இணைந்திருக்கிறார்கள், பல புதிய தொழில்முனைவோரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்கள், நேரடியாக வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார்கள். பெங்களூரூவின் ஈ-பரிசாரா, இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது அச்சிடப்பட்ட சர்க்கியூட் பலகைகளில் உள்ள விலைமதிபற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்க, சுதேசித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மும்பையில் பணியாற்றிவரும் ஈகோரெகோவும் கூட மொபைல் செயலி வாயிலாக மின்பொருள் கழிவை சேகரிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
உத்தராகண்டின் ருட்கீயின் ஏடேரோ மறுசுழற்சியானது இந்தத் துறையில் உலகெங்கிலும் பல காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. இதுவும் கூட மின்பொருள் கழிவுத் தொழில்நுட்பத்தைத் தயாரித்து, கணிசமாகப் பெயர் ஈட்டியிருக்கிறது. போபாலில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் கபாடீவாலா வாயிலாக டன் கணக்கான மின்பொருள் கழிவு ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. இதைப் போலவே, பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன
என்றாலும், இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களின் வெற்றிக்கான முக்கியமான நிபந்தனை – மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும் என்பது தான். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 முதல் 17 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக, மின்பொருள் கழிவுத் துறையில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றார்கள்.