தேவதைக் கதைகளில் வரும் காட்சிகள்போல்…
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சமூக ஊடகத்தில் கேட்கவே வேண்டாம், உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன.
பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. பனிஹால் முதல் பட்காம் வரை செல்லும் ரயிலின் வீடியோவையும் கூட மக்கள் குறிப்பாக விரும்பியிருக்கிறார்கள். அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் மேலும் என்ன கூறுகிறார்கள் என்றால், இது ஏதோ ஒரு அயல்நாட்டின் படமல்ல, நமது நாட்டின் கஷ்மீர் பற்றிய படங்கள் என்கிறார்கள்.
ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார் – இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்? இது மிகவும் சரி தான். அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் இட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறுவேன். கஷ்மீரத்தில் பனிமூடிய மலைகள், இயற்கை அழகு இவற்றோடு கூடவே, மேலும் அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன.
கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விளையாட்டுக்களின் கருப்பொருள் – ஸ்நோ கிரிக்கெட். என்ன, பனி கிரிக்கெட் அத்தனை சுவாரசியமாகவா இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். கஷ்மீரத்து இளைஞர்கள் பனியிலே கிரிக்கெட்டை மேலும் அற்புதமானதாக மாற்றியிருக்கிறார்கள். இதன் வாயிலாக, வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய வகையில் கஷ்மீரத்தில் இளைய விளையாட்டு வீரர்களின் தேடல் நடைபெறுகிறது.
இதுவும் ஒரு வகையான விளையாடு இந்தியா இயக்கத்தின் விரிவாக்கம் தான். கஷ்மீரத்தில், இளைஞர்களில், விளையாட்டுக்கள் தொடர்பாக உற்சாகம் அதிக அளவில் பெருகி வருகிறது. இனிவரும் காலத்தில் இவர்களில் பலர், தேசத்திற்காக பதக்கங்களை வென்றெடுப்பார்கள், மூவண்ணத்தைப் பறக்க விடுவார்கள். உங்களிடத்தில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கஷ்மீருக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் சற்று நேரம் ஒதுக்குங்கள். இந்த அனுபவம் உங்களுடைய பயணத்தை மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.