
மாநிலங்களவை அமளியை படம் பிடித்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தகாங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பதில் அளித்தபோது சபையில் அமளி ஏற்பட்டது.
அதை சபையில் இருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் படம் பிடித்துள்ளார். சபையில் அமளியை படம் பிடித்தது குறித்து நடவடிக்கை எடுக்க கட்சித்தலைவர்களின் கருத்தைக்கூறுமாறு, மாநிலங்களவையில் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று கேட்டார்.
அதன்பின்னர் ரஜனி அசோக்ராவ் பாடீலை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் அவரை எஞ்சிய கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் அறிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.